Wednesday, 12 September 2012

திருபாய் அம்பானி

 

தொடக்ககால வாழ்க்கை

திருபாய் அம்பானி குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும் ஜமுனாபென்னுக்கும் மகனாய்ப் பிறந்தார். ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் .பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், . பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் உயர்த்தப்பட்டார்.
அவருக்கும் கோகிலா பென்னுக்கும் திருமணம் நடந்தது. முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோதாரி மற்றும் ரினா சல்கோன்கர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

மஜின் வணிக நிறுவனம்

திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக 350sqft (33m2)அது இருந்தது. ஆரம்பத்தில், தங்களுக்கு வணிகத்தில் உதவ இரண்டு உதவியாளர்களை அவர்கள் அமர்த்திக் கொண்டனர். 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். இருவரும் வெவ்வேறான வணிக மனோநிலை கொண்டிருந்தனர் என்றும் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர் என்றும் நம்பப்படுகிறது. திரு.தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். திருபாய் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாதவர். அவர் கையிருப்புகளை குவித்து, விலை உயர்வை எதிர்நோக்கி, லாபத்தை குவிப்பதில் நம்பிக்கையுற்றிருந்தார். 1968-ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு விலையுயர்ந்த அடுக்கக வீட்டிற்கு அவர் இடம் பெயர்ந்தார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1970களின் பிற்பகுதியில் சுமார் 10 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
"அவரது மனிதவள நிர்வாகத் திறன் அபாரமானது. அவர் எப்போதும் 'திறந்த கதவு' கொள்கையைப் பின்பற்றினார். ஊழியர்கள் அவரது அறைக்குள் சென்று தங்களது பிரச்சினைகளை அவருடன் நேரடியாக விவாதிக்க முடியும். ஊழியர்களோ, பங்குதாரர்களோ, பத்திரிகையாளர்களோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ யாராயிருந்தாலும் சரி, வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு என தனி வகை கையாளும் முறைகளை அம்பானி கொண்டிருந்தார்.” என்று ஆசியா டைம்ஸ் மேற்கோளிடுகிறது: அதிகாரிகளை விலைக்கு வாங்கி சட்டங்களை தனக்கு பொருந்தும் வகையில் மாற்றி எழுதிக் கொண்டார் என அம்பானியின் போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வணிகம் தொடங்கிய நாட்களையும், இந்திய அதிகார மைய கட்டுப்பாடுகள் அப்போது இருந்த குறைபாடுகளுடனான அமைப்பை பயன்படுத்தி பொருளீட்டும் கலையில் அவர் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பதையும் அவர்கள் நினைவு கூறுகின்றனர். மிளகாயை அவர் ஏற்றுமதி செய்தார், பல சமயங்களில் இதில் நஷ்டம் தான் இருக்கும், மறுநிரப்பல் உரிமங்களை ரேயான் இறக்குமதி செய்ய அவர் பயன்படுத்திக் கொண்டார். பின் ரேயான் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட துவங்கிய பின், மீண்டும் அவர் ரேயான் ஏற்றுமதி செய்தார், இதுவும் நஷ்டத்தில் செய்து நைலானை இறக்குமதி செய்தார். அம்பானி எப்போதும் தனது போட்டியாளர்களை விட ஒரு அடி முன்னால் நின்றார். அவர் இறக்குமதி செய்த பொருட்களுக்கு பெரும் தேவை இருந்ததால், அவரது லாப விழுக்காடு 300 சதவீதத்துக்கு குறைவது என்பதே அரிதாகத் தான் நிகழ்ந்தது."

ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ்

துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார். துணிகள் பாலியஸ்டர் இழை நூல் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன. திருபாய் "விமல்" என்னும் வியாபாரப் பெயரை தொடக்கி வைத்தார். இது அவரது மூத்த சகோதரரான ரமனிக்லால் அம்பானியின் மகனான விமல் அம்பானியின் பெயரால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டில் செய்த மிகப் பரந்த சந்தைப்படுத்தலின் காரணமாக "விமல்" வீட்டுக்கு வீடு அறிந்த பெயரானது. சில்லறை விற்பனை உரிமையகங்கள் துவங்கப்பட்டன. அவை "ஒன்லி விமல்" என விமல் டெக்ஸ்டைல் வியாபாரப் பெயரை மட்டும் விற்கப் பயன்படுத்தப்பட்டன. 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது."வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது" என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது.

பொதுப் பங்கு வெளியீடு

இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது. 1977-ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 58,000 க்கும் அதிகமான சிறு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாவது லாபகரமானது என்று குஜராத்தின் கிராமப் பகுதிகளின் ஏராளமான சிறு முதலீட்டாளர்களை திருபாயால் நம்பச் செய்ய முடிந்தது.
ஆண்டுப் பொதுக் கூட்டங்களை விளையாட்டு அரங்கங்களில் நடத்திய முதல் தனியார் துறை நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் தான். 1986-ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கிராஸ் மெய்டன், மும்பையில் நடந்தது. இதில் 35,000 க்கும் அதிகமான பங்குதாரர்களும், ரிலையன்ஸ் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.
முதல்முறையாக முதலீடு செய்யும் பெரும் எண்ணிக்கையிலான சில்லறை முதலீட்டாளர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்யும் வகையில் திருபாய் அம்பானியால் நம்பிக்கையேற்படுத்த முடிந்தது.
1980களின் ஆரம்பத்தில் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

திருபாயின் கட்டுப்பாட்டில் பங்குச் சந்தை

1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது. தங்களது பங்கு விலைகள் ஒரு இம்மியளவு கூடக் குறையாத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. வாய்ப்பை உணர்ந்த, கரடிச் சந்தையில் லாபமீட்டும் கல்கத்தாவைச் சேர்ந்த பங்குத் தரகர்கள் குழு ஒன்று ரிலையன்ஸ் பங்குகளை அதிக விலையில் விற்று பின் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் கையிருப்பிலில்லாமல் விற்கத் துவங்கியது. இதனை எதிர்கொள்ள, மற்றுமொரு பங்குத் தரகர்கள் குழு - இன்று வரை இவர்கள் "ரிலையன்ஸின் நண்பர்கள்" என்று தான் குறிப்பிடப்படுகிறார்கள் - மும்பை பங்குச் சந்தையில் கையிருப்பு இல்லாத நிலையில் விற்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கத் துவங்கினர்.
காளைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய போதுமான பணம் இல்லாது போய் விடும். அப்போது அவர்கள் மும்பை பங்குச் சந்தையின் "பத்லா" வர்த்தக ஏற்பாட்டுக்கு தயாராய் இருப்பார்கள். இதன் அடிப்படையில் தான் கரடிச் சந்தையில் லாபமீட்டும் கூட்டம் பங்குகள் கையில் இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருந்தது. காளைகள் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். பரிமாற்ற நிறைவுத் தேதி வரையிலும் ஒரு பங்கு ரூ. 152 என்கிற நிலையே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது. நிறைவுத் தேதியில், காளைகள் பங்குகளின் பத்திரங்களை சமர்ப்பிக்க கோரியபோது இந்த கரடிச்சந்தை லாபமீட்டும் குழு திகைத்துப் போனது. ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியிருந்த பங்குத் தரகர்களுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை திருபாய் அம்பானியே வழங்கினார். பங்கு பத்திரங்களை வழங்க முடியாத நிலையில், காளைகள் "அன்பத்லா" (அபராதத் தொகை) தொகையாக பங்குக்கு ரூ.35 கோரினர். இதனால், பங்குகளின் தேவை அதிகரித்து, ரிலையன்ஸ் பங்குகளின் விலை சில நிமிடங்களிலேயே 180 ரூபாய்க்கும் அதிகமாய் விட்டது. இந்த வர்த்தகமானது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருபாய் அம்பானி பங்குச் சந்தைகளின் முடிசூடா மன்னராகியிருந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மோதுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை தனது எதிர்ப்பாளர்களுக்கு அவர் நிரூபித்தார்.
இந்த சூழ்நிலைக்கு ஒரு தீர்வினைக் காண, பம்பாய் பங்குச் சந்தை மூன்று வணிக நாட்களுக்கு மூடப்பட்டது.மும்பை பங்குச் சந்தை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, கரடிச் சந்தையில் லாபமீட்டும் குழு பங்குகளை அடுத்த சில நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் "அன்பத்லா" தொகையை பங்குக்கு ரூ.2 என குறைத்தனர். இதனால் அதிகமான விலை அளவுகளில் சந்தையில் இருந்து ரிலையன்ஸ் பங்குகளை வாங்கும் நெருக்கடி கரடிச்சந்தையில் லாபமீட்டும் குழுவுக்கு நேர்ந்தது. அத்துடன் திருபாய் அம்பானியே அந்த குழுவுக்கு பங்குகளை அதிகமான விலையில் வழங்கி கனமான ஆதாயம் ஈட்டினார் என்பதும் பிறகு தெரிய வந்தது.
இந்த நிகழ்விற்கு பிறகு, அவரது எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வரை நூல் வணிகம் செய்து கொண்டிருந்த ஒருவர் எப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் இவ்வளவு பெரும் பணத்தைப் புரட்ட முடிந்தது என்பதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கான பதிலை அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வழங்கினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1982-83 காலத்தில் ரிலையன்ஸில் ரூ.22 கோடியை முதலீடு செய்திருந்ததாக அவையில் அவர் தெரிவித்தார். குரோக்கடைல், லோட்டோ மற்றும் ஃபியாஸ்கோ ஆகிய பல நிறுவனங்கள் வழியாக அவர்களது முதலீடுகள் திருப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சுவையான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்கள் அல்லது முதலாளிகளின் துணைப்பெயர்களும் ஷா என ஒரேபெயரில் முடிவதாய் இருந்தது. இந்த விடயம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட விசாரணை ரிலையன்ஸ் அல்லது அதன் முக்கிய பங்குதாரர்கள் எந்த முறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தீர்மானித்தது.


காலப் போக்கில், திருபாய் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். முதன்மையான சிறப்புக்கவனம் பெட்ரோலிய வேதிகள் துறையில் இருக்க, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தப்பட்டது.

இறப்பு
ஜூன் 24, 2002 அன்று ஒரு பெரும் மாரடைப்பு திருபாய் அம்பானியைத் தாக்கியது. மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு இரண்டாவது மாரடைப்பு. பிப்ரவரி 1986-ஆம் ஆண்டில் வந்திருந்த முதலாவது மாரடைப்பில் அவரது வலது கை செயலிழந்திருந்தது. ஒரு வாரத்திற்கும் அதிகமாக சுயநினைவற்ற நிலையில் இருந்த அவர் ஜூலை 6, 2002 அன்று இரவு சுமார் 11.50 (இந்திய நேரம்) மணியளவில் காலமானார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் வணிகத் துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான சாதாரண மக்களும் கலந்து கொண்டனர். அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஜூலை 7, 2002 அன்று மும்பையின் சந்தன்வாடி சுடுகாட்டில் மாலை சுமார் 4:30 மணியளவில் (இந்திய நேரம்) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அவருக்கு கோகிலாபென் அம்பானி என்னும் மனைவியும், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகிய இரண்டு மகன்களும், நீனா கோத்தாரி மற்றும் தீப்தி சல்கோன்கர் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.
பம்பாயில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராகத் தான் திருபாய் அம்பானி தனது நெடும் பயணத்தைத் துவக்கினார். இந்த வணிகப்புலிக்கு மரியாதையளிக்கும் விதமாக, மும்பை துணி வணிகர்கள் ஜூலை 8, 2002 அன்று கடையடைப்பு செய்திருந்தனர். திருபாய் இறந்த சமயத்தில், ரிலையன்ஸ் குழுமம், மொத்த விற்றுமுதலாய் ரூ.75,000 கோடி அல்லது 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டிருந்தது. 1976-77 காலத்தில், ரிலையன்ஸ் குழுமம், ஆண்டு விற்றுமுதலாக ரூ.70 கோடியை மட்டுமே கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது. அத்துடன் திருபாய் வெறும் ரூ.15,000(US$350) கொண்டே தனது வணிகத்தைத் துவக்கினார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

திரைப்படத்தில்

 

திருபாய் அம்பானியின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட திரைப்படம் 12, ஜனவரி 2007 அன்று வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில், .ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த குரு (2007-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்) என்னும் இந்தித் திரைப்படம், ஒரு மனிதன் இந்திய வணிக உலகில் தனது முத்திரையை பதிக்க எங்ஙனம் போராடுகிறான் என்பதை கற்பனையாக சக்தி குரூப் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கொண்டு காட்டுகிறது.

திருபாய்க்கு பின் ரிலையன்ஸ்

 

2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், முகேஷ் அம்பானி அளித்த ஒரு நேர்காணலில், சகோதரர் அனில் அம்பானியுடன் தனக்கு "உரிமைத்துவ சிக்கல்கள்" விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இந்த கருத்துவேறுபாடுகள் "தனிப்பட்டு மனதளவில்" மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். தொழில்முறையில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வலிமைமிகுந்த நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில், இந்த கருத்துவேறுபாடு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விடயம் ஊடகங்களில் விரிவான இடத்தைப் பிடித்தது.[9]
அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பராகத் திகழ்ந்த ஐசிஐசிஐ வங்கி[10] யின் நிர்வாக இயக்குநரான குண்டபூர் வாமன் காமத், இந்த பிரச்சினையைத் தீர்க்க உதவுபவராக ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார். பிரச்சினையை தீர்ப்பதில் சகோதரர்கள் தங்கள் தாய் கோகிலாபென் அம்பானி மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். ஜூன் 18, 2005 அன்று, சொத்துபிரிப்பை ஒரு செய்திக் குறிப்பு வழியாக கோகிலாபென் அம்பானி அறிவித்தார்.
ரிலையன்ஸ் குழுமம் அம்பானி சகோதரர்கள் இடையே பிரிக்கப்பட்டது. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) மற்றும் இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்பரேஷன் நிறுவனம் (IPCL) கிடைத்தது. அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்களுக்குத் தலைவரானார். முகேஷ் அம்பானி தலைமையிலான குழுமம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட, அனிலின் குழுமம், அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG) என்று பெயரிடப்பட்டது.

No comments:

Post a Comment