நாம்
விரும்பும் இலக்கை அடைவதற்கு
உடல் வலிமையை விட மனவலிமைதான்
முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய
வரலாற்று மாந்தர்கள் பலர்.
உலகத்தின் உதாசீன
பேச்சுக்களையும் ஏளன
சிரிப்புகளையும், கேலி
கிண்டல்களையும் தாண்டி ஒருவன்
சாதனை படைக்க வேண்டுமென்றால்
அதற்கு உடல் வலிமை மட்டும்
போதாது. இரும்பு
போன்ற மன வலிமையும் வேண்டும்.
நாம் தெரிந்துகொள்ளவிருக்கும்
வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட
மன வலிமை இருந்தது இல்லையென்றால்
பிறந்தபோதே ஆரோக்கியமின்றி
ஒழுங்காக பள்ளிக்குக்கூட
செல்லாமல் குண்டர் கும்பல்களில்
சேர்ந்து எங்கெல்லாம் சண்டை
நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில்
ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு
தற்காப்பு கலையில் சாதனை
செய்ய வேண்டும் என்ற கனவும்,
ஒரு சிறந்த நடிகனாக
வரவேண்டும் என்ற ஆசையும்
உதித்திருக்காது. பல
இன்னல்களை கடந்து தனது கனவுகளை
நனவாக்கவும் முடிந்திருக்காது.
1959 ஆம்
ஆண்டு சராசரிக்கும் குறைவான
உயரத்தோடும், ஒல்லியான
தேகத்தோடும் அமெரிக்க மண்ணில்
வந்திறங்கினான் அந்த 18
வயது இளைஞன். அப்போது
ஜான் வேய்ங், ஜேம்ஸ்
டீன், சார்ல்ஸ்
அட்லஸ் போன்ற நடிகர்கள்
புகழின் உச்சியில் இருந்தனர்.
ஆனால் பார்ப்பதற்கு
சாதாரணமாக இருந்த அந்த இளைஞன்
என்ன சொன்னான் தெரியுமா?
அந்த ஆக்ஷன்
கதாநாயகர்களுக்கெல்லாம்
இனி நாந்தான் மாற்று என துணிந்து
சொன்னான். அப்போது
அமெரிக்கர்கள் மட்டுமல்ல
அந்த இளைஞனின் சமூகம்கூட
அவனை ஏளனமாக பார்த்தது.
ஆனால் ஏளனங்களை
ஏணிப்படிகளாக்கி அடுத்த 14
ஆண்டுகளில் வெற்றிக்கொடி
நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம்
தற்காப்புக்கலைக்கு உலகலாவிய
அங்கீகாரம் பெற்றுத்தந்தார்
அந்த தற்காப்புக்கலை வல்லுநர்
திரைப்பட நடிகர். அவரது
பெயர் புரூஸ் லீ.
1940 ஆம்
ஆண்டு நவம்பர் 27 ந்தேதி
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ
மாநிலத்தில் பிறந்தார் புரூஸ்
லீ. பிறந்தபோது
அவருக்கு இடப்பட்ட பெயர் லீ
ஜுன்பேன்' அவரது
தந்தை லீ கோய்ன் ஒரு சீனர்,
தாயார் கிரேஸ் ஐரோப்பியர்.
சிறுவயதில் ஹாங்காங்கில்
வாழ்ந்தது புரூஸ் லீயின்
குடும்பம். அங்கே
பெரும்பாலான சிறுவர்கள்
தெருக்களில்தான் பொழுதைக்
கழிப்பார்கள். அப்படி
நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ்
லீக்கு சண்டை போடுவதில் இருந்த
ஆர்வம் படிப்பில் இல்லை.
மேலும் சுமார் 20
சீனப்படங்களில்
குழந்தை நட்சத்திரமாக தோன்றும்
வாய்ப்பு புரூஸ் லீக்கு
கிடைத்தது. சண்டையையும்
சினிமாவையும் எடுத்துக்கொண்டு
பள்ளியையும் பாடங்களையும்
ஒதுக்கினார் புரூஸ் லீ.
இயற்கையாகவே
நன்றாக சண்டைபோடும் திறமை
அவருக்கு இருந்ததால் ஒரு
கும்பலுக்கு தலைவனாகவும்
இருந்தார். புரூஸ்
லீயின் தந்தையோ நன்கு படித்து
தொழில்துறையில் ஈடுபட வேண்டும்
என விரும்பினார் ஆனால்
சண்டைபோட்டு எல்லோரையும்
வெற்றிக்கொள்ள வேண்டும்
என்பதிலேயே குறியாக இருந்தார்
புரூஸ் லீ. சிலமுறை
பெரிய குண்டர்களிடம் மோதி
தோல்வியும் கண்டிருக்கிறார்.
அப்போதுதான் ஒரு நல்ல
தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள
வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு
எழுந்தது. தன்
தந்தையிடமே குங்பூ என்ற
பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக்
கற்றுக்கொண்டார். அடிக்கடி
அடிதடிகளில் ஈடுபட்டதால்
புரூஸ் லீயின் கொட்டத்தைப்
பொறுத்துக்கொள்ள முடியாத
பெற்றோர் அவரிடம் 100 டாலரைக்
கொடுத்து அமெரிக்காவில் போய்
எப்படியாவது பிழைத்துக்கொள்
என்று கப்பலேற்றிவிட்டனர்.
அப்போதுதான்
18 வயது இளைஞனாக
அமெரிக்கா வந்து சேர்ந்தார்
புரூஸ் லீ. சியாட்டலில்
இருந்த ஒரு நண்பரின் சீன உணவக
விடுதியில் தங்கிக்கொண்டு
தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க
தொடங்கினார். அந்த
விடுதியில் வேலையும் பார்த்தார்.
அவரது எண்ணம், செயல்
எல்லாம் குங்பூ என்ற
தற்காப்புக்கலையைப் பற்றியே
இருந்தது. மேற்கத்திய
மல்யுத்தம், ஜீடோ,
கராத்தே, குத்துச்சண்டை
ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு
சில புதியபாணி அசைவுகளையும்
சேர்த்து அவர் சொந்தமாக ஒரு
தற்காப்புக்கலையை உருவாக்கினார்.
அதற்கு ஜீட்குன்டோ
என்று பெயரிட்டார். அவரிடம்
தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள
வந்த லிண்டா என்ற பெண்ணை
மணந்து கொண்டார் புரூஸ் லீ.
20 படங்களில் குழந்தை
நட்சத்திரமாக நடித்திருந்த
புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில்
கதாநாயகனாக நடிக்க வேண்டும்
என்ற ஆசையும் இருந்தது.
ஆனால் ஹாலிவுட் அவரை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
சோர்ந்துபோன புரூஸ்
லீ ஹாங்காங் திரும்பினார்.
தி
பிக் பாஸ், ஸ்பிட்
ஆஃப் பியூரி என்ற இரண்டு
படங்களில் புரூஸ் லீ நடித்தார்
அதில் அவர் பம்பரம்போல்
சுழன்று சுழன்று காட்டிய
வித்தைகளும், சாகசங்களும்
ஆசிய சினிமா பிரியர்களை
அசத்தின. ஆனால்
ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள்
ஹாலிவுட்டின் கடைக்கண்
பார்வையைக்கூட பெறத்தவறின.
அதைப்பற்றி கவலைப்படாத
புரூஸ் லீ 1972 ஆம்
ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த
டிராகன்” என்ற படத்தை சொந்தமாக
தயாரித்தார். சினிமாவின்
மந்திரங்களை ஓரளவுக்கு
புரிந்துகொண்டிருந்த புரூஸ்
லீ திரைக்கதையைத் தானே எழுதி
திரைப்படத்தை இயக்கவும்
செய்தார். பொதுவாக
சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட்
நடிகர்களை வைத்துதான் படம்
எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ்
லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல்
அதிவேகமாக அதேநேரத்தில்
தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய
திறமைசாலி என்பதை அந்தப்படம்
அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.
அதுவரை
ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ்
லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி
ரிட்டன் ஆஃப் த டிராகன்”
படத்திற்கு பிறகு அமெரிக்க
இளையர்களும் புரூஸ் லீயின்
வெறித்தனமான விசிறிகளாயினர்.
அந்தப்படம் தந்த
வெற்றிக்களிப்பில் “கேம்
ஆப் டெத்” என்ற தனது
அடுத்தப்படத்துக்கான வேலையை
ஆரம்பித்தார் புரூஸ் லீ.
அவரது பிரபலத்தையும்
வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட
ஹாலிவுட் தயாரிப்பாளர்கள்
ஓடோடி வந்து தங்களுக்காக
படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ்
லீயைக் கேட்டுக்கொண்டனர்.
ஹாலிவுட்டில் நடிக்க
வேண்டுமென்பதை தனது வாழ்நாள்
லட்சியமாக கொண்டவராயிற்றே
அவர். உடனே தனது
சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு
ஹாலிவுட்டுக்காக “என்டர்
தி டிராகன்” என்ற படத்தை
எடுக்கத் தொடங்கினார்.
அசுர வேகத்தில் நடைபெற்ற
படப்பிடிப்பு, ரீ
ரெக்கார்டிங், எடிட்டிங்
வேலைகள் அனைத்தும் இரண்டே
மாதங்களில் முடிவடைந்தன.
“என்டர்
தி டிராகன்” என்ற படம் திரைக்கு
வர மூன்றே வாரங்கள் இருந்தபோது
எதிர்பாரத ஒரு அசம்பாவிதம்
நிகழ்ந்தது. 1973 ஆம்
ஆண்டு ஜீலை 20 ந்தேதி
தன் மனைவி லிண்டாவிடம்
விடைபெற்றுக்கொண்டு
முடிக்கப்படாமல் இருந்த தனது
சொந்தப்படமான “கேம் ஆப் டெத்”
என்ற திரைப்படத்தைப்பற்றி
விவாதிக்க வெளியில் சென்றார்
புரூஸ் லீ. அன்று
இரவே மர்மமான முறையில்
இறந்துபோனார் புரூஸ் லீ.
அப்போது அவருக்கு
வயது 33 தான். அவர்
இறந்தது பெடிட் டிங் பே என்ற
ஒரு நடிகையின் வீட்டில் அதனால்
புருஸ் லீயின் மரணம் குறித்து
பல வதந்திகள் எழுந்தன.
ஒருமுறை படப்பிடிப்பில்
ஏற்பட்ட சண்டைக்காட்சியின்
போது தலையில் விழுந்த அடியால்
மூளை வீங்கி இறந்துபோனார்
என்று மருத்துவர்கள் கூறினர்.
உண்மையைக் கண்டுபிடிக்க
ஹாங்காங் அரசாங்கம் ஒரு
விசாரணைக் குழுவை நியமித்தது.
ஆனால் இன்றுவரை புரூஸ்
லீ இறந்ததற்கான உண்மையான
காரணம் தெரியவிலை.
புரூஸ்
லீயின் மரணத்திற்கு பிறகு
வெளிவந்த “என்டர் தி
டிராகன்” படம் சக்கைப்போடு
போட்டு 200 மில்லியன்
டாலர் வசூலை அள்ளிக்குவித்தது.
உலகெங்கும் பல இளையர்கள்
கராத்தே பைத்தியமானார்கள்.
மூளை முடுக்குகளிலெல்லாம்
கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன.
இவ்வாறு உலக இளையர்களின்
கவணத்தை தனி ஒரு மனிதனாக
தற்காப்புக்கலைப்பக்கம்
திருப்பிய பெருமை புரூஸ்
லீயையே சேரும். வரலாற்றின்
எந்த கால கட்டத்தையும்விட
எழுபதுகளில்தான் மிக அதிகமான
இளையர்கள் தற்காப்புக்கலை
பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர்
என்ற உண்மையே அதற்கு சான்று.
தன் கனவை நனவாக்க
அயராது பாடுபட்டவர் புரூஸ்
லீ. உடல்தான் தனது
மூலதனம் என்று நம்பிய அவர்
அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார்.
தினசரி ஓடுவது,எடை
தூக்குவது என்று தனது உடலை
வலுப்படுத்திக்கொண்டதோடு
வைட்டமின்கள், ஜின்செங்,
ராயல் ஜெல்லி போன்றவற்றையும்
உட்கொண்டு உடலை திடமாக
வைத்துக்கொண்டார்.
அகால
மரணம் அவரது ஆயுளை குறைக்காமல்
இருந்திருந்தால் சினிமாவிலும்,
தற்காப்புக்கலையிலும்
இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை
குவித்திருப்பார் புரூஸ்
லீ. 33 ஆண்டுகளே
வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள
வாழ்கையை வாழ்ந்திருக்கிறார்.
குண்டர் கும்பலில்
இருந்தாலும், ஒழுங்காக
படிக்காவிட்டாலும் தான்
தேர்ந்தெடுத்த துறையில் அவர்
செலுத்திய முழு கவணமும்
காட்டிய ஆர்வமும் கொட்டிய
உழைப்பும் சிந்திய வியர்வையும்தான்
புரூஸ் லீக்கு அந்த இளம்
வயதிலேயே வானத்தை வசப்படுத்தின. நாம்
எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம்
என்பது முக்கியமல்ல தேர்ந்தெடுத்த
பிறகு அந்த துறையில் முழு
கவணம், ஆர்வம்,
உழைப்பு,
வியர்வை,
விடா முயற்சி
ஆகியவற்றை செலுத்துகிறோமா
என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு ஈடுபடுத்திக்
கொண்டால் நமக்கும் எந்த வானம்
வசப்படாமல் போகும்!!!
Good
ReplyDelete